search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுழைவுக்கட்டணம் உயர்வு"

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி திகழ்கிறது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஆகும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் மொத்த பரப்பளவு 22 ஹெக்டேர். வெளிநாடுகளை சேர்ந்த மரங்கள் பச்சை, பசேல் என வளர்ந்து காணப்படுவதோடு, பசுமையான புல்வெளிகள் உள்ளது. இதேபோன்று குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் ஊட்டி ரோஜா பூங்கா தோட்டக்கலைத்துறை மூலம் இயங்கி வருகின்றது.

    ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் மற்றும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை, விடுமுறை காலங்களில் தாவரவியல் பூங்காவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று வரை (டிசம்பர் 15-ந் தேதி வரை) 26 லட்சத்து 91 ஆயிரத்து 727 சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை புரிந்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் நுழைவுக்கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. பெரியவர்களுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.15-ல் இருந்து ரூ.20 ஆகவும் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பூங்கா பராமரிப்பை மேலும் மேம்படுத்துவதற்காக கட்டணம் உயர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பூங்காவில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து 2 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.50 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. ஊட்டி ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட வில்லை. இதுகுறித்து ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்கள், 2-வது சீசன் காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு அதிகமாக வருகை தருகின்றனர். மேலும் விடுமுறை காலங்களிலும் வருகை புரிகிறார்கள். பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் பூங்காவிற்கு சென்று கண்டு ரசிக்க முடியாத வகையில், பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலைத்துறையும் திடீரென உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, ஊட்டியில் அரசுக்கு சொந்தமான சிறுவர் பூங்கா சாதாரண மக்கள் தங்களது குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழிக்கும் இடமாக இருந்தது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் அந்த பூங்கா ஏலம் விடப்பட்டு, குழந்தைகள் விளையாடும் இடமாக மாற்றப்பட்டது. தற்போது ஒரு நபருக்கு ரூ.100-க்கு மேல் வசூலிக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் குழந்தைகளுடன் பொழுதுகளை போக்க சமவெளி போன்ற நகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள் இல்லை. எனவே, பிற துறையிடம் உள்ள நகராட்சி பூங்காவை திரும்ப பெற்று பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும்.

    மேலும் ஊட்டியில் நடந்த குறும்பட விழாவில் கலந்துகொண்ட மலையாள திரைப்பட இயக்குனர் ஜாய் மேத்யூ, ஊட்டியில் சினிமா கட்டணம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்பு அதிகளவில் எடுக்கப்படுவது இல்லை என்று தெரிவித்தார். தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது, சினிமா தொழிலாளர்கள் வேலையிழப்பை அதிகரிக்கும்.

    எனவே கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
    ×